கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய அவசியமே இல்லை வி.சி., தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்
புதுச்சேரி : 'இண்டியா' கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டிய அவசியமே இல்லை' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.புதுச்சேரியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், கூறியதாவது:கடந்த 2015ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனும் பொருளில், கருத்தரங்கை நாங்கள் நடத்தினோம். இந்திய அளவில், டில்லியில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றாலும் கூட கூட்டணி ஆட்சி, தொடர்ந்து, 1977ல் இருந்தே நடந்து வருகிறது.அதைப்போல தமிழகத்திலும் வருவது அவசியமானது. அதற்கான, சூழல் இன்னும் கனியவில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. இப்போது எல்லா கட்சிகளும் இதை பேச துவங்கி இருக்கிறார்கள் என்பது ஒரு தொடக்க நிலை.வரும், 2026ம் ஆண்டு அதற்கு ஏதுவான ஒரு காலம் இல்லை. தமிழகத்தில் கூட்டணி அமைப்போம் என்று, தி.மு.க., அல்லது அ.தி.மு.க., சொல்கிறது என்று சொன்னால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. ஆனால் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் நடைமுறைக்கு சாத்தியமானதா என்ற கேள்வி எழுகிறது. வரும், 2026ம் ஆண்டில், அதற்கான சூழல் இல்லை. எங்களை பொறுத்தவரை, கடந்த 2016ல் இருந்து தொடர்ந்து, தி.மு.க கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இண்டியா கூட்டணியை இந்திய அளவில் உருவாக்கியதில், எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியை, மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், அதை மேலும் மேலும் வலுப்படுத்துவதும் எங்கள் கடமை.எங்கள் கட்சியை, கூட்டணியில் இருந்து வெளியேறப்போகும் கட்சி என்கிற ஒரு தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். அது உண்மை அல்ல. நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.