| ADDED : பிப் 09, 2024 05:43 AM
புதுச்சேரி: வேட்பாளர் குறித்து, முதல்வர் ரங்கசாமியுடன், பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் நேற்று ஆலோசனை நடத்தினார்.பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இரண்டாவது முறையாக நேற்று முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 30 நிமிடம் வரை நீடித்தது.கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ற வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதே முதல்வர் மற்றும் பா.ஜ., வினரின் எண்ணம். அதுகுறித்து விவாதித்தோம். அடுத்தக்கட்டமாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும்' என்றார்.பா.ஜ., வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், 'பா.ஜ.,வில் வேட்பாளரை முடிவு செய்யவில்லை என்று யார் சொன்னது? அதுபோன்ற குற்றச்சாட்டு ஏதும் இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட பலரும் சீட் கேட்டுள்ளனர். நேரம் வரும்போது அதிகாரப்பூர்வமாக அறிப்போம்' என்றார்.