குடும்ப பிரச்னையில் பெண் தற்கொலை
புதுச்சேரி : சிதம்பரம் அடுத்த அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர். புதுச்சேரி, கம்பன் நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் புதுச்சேரியில் தங்கி வேலை செய்து வந்தனர். கவுசல்யா தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் அனைவரிடமும் சகஜமாக பேசி வந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், கம்பன் நகரில் உள்ள தனது தாய் வீட்டின் அருகே வாடகை வீடு எடுத்து கவுசல்யா குடும்பத்துடன் தங்கியிருந்தார். தம்பதி இடையே கடந்த 29ம் தேதி, தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த கவுசல்யா துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதித்தனர். இதனிடையே அச்சத்தில், சிவக்குமார் அன்று இரவு, கம்பன் நகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். லோகோ பைலட் சுதாரித்து ரயிலை நிறுத்தியதால், சிவக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்நிலையில், கவுசல்யா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.