ஒடிசா பாட்மின்டன்: தான்வி அபாரம்
கட்டாக்: ஒடிசா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, உன்னதி ஹூடா, தருண், கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் முன்னேறினர்.ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, அதிதி பட் மோதினர். இதில் தான்வி 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-7, 21-14 என, தாய்லாந்தின் திடாப்ரானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் தான்யா ஹேம்நாத் 21-18, 21-18 என சகவீராங்கனை ஸ்ரீயான்ஷியை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.மற்ற 2வது சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீராங்கனைகளான அனுபமா, அன்மோல் கார்ப், தஸ்னிம் மிர், காலிறுதிக்கு முன்னேறினர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் தருண் 21-16, 12-21, 21-11 என, சகவீரர் கோவிந்த் கிருஷ்ணாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-12, 21-18 என இந்தோனேஷியாவின் டென்டி டிரியான்ஷியாவை தோற்கடித்தார். இந்தியாவின் சங்கர் முத்துசாமி 21-8, 19-21, 21-15 என சகவீரர் ஆர்யாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.