உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது இந்தியா ஏ: தென் ஆப்ரிக்கா ஏ ஆறுதல் வெற்றி

கோப்பை வென்றது இந்தியா ஏ: தென் ஆப்ரிக்கா ஏ ஆறுதல் வெற்றி

ராஜ்கோட்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 73 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா 'ஏ' அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் விளையாடியது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 'ஏ' அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று, ராஜ்கோட்டில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இந்தியா 'ஏ' அணி கேப்டன் திலக் வர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிக்கு லுவான்-டிரே பிரிட்டோரியஸ் (123), ரிவால்டோ மூன்சாமி (107) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 50 ஓவரில் 325/6 ரன் எடுத்தது. டெலானோ (30) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'ஏ' அணி சார்பில் கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.சவாலான இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் (25), அபிஷேக் சர்மா (11), கேப்டன் திலக் வர்மா (11), ரியான் பராக் (17) சோபிக்கவில்லை. இஷான் கிஷான் (53), ஆயுஷ் படோனி (66) அரைசதம் கடந்தனர். நிஷாந்த் சாந்து (10), ஹர்ஷித் ராணா (0) ஏமாற்றினர். மானவ் சுதார் (23), பிரசித் கிருஷ்ணா (23) நிலைக்கவில்லை.இந்தியா 'ஏ' அணி 49.1 ஓவரில் 252 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருதை பிரிட்டோரியஸ் வென்றார். தொடர் நாயகன் விருதை ருதுராஜ் கெய்க்வாட் (210 ரன்) கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை