உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஐ.பி.எல்., விதிமுறையில் மாற்றமா: சென்னை அணியில் தொடரும் தோனி

ஐ.பி.எல்., விதிமுறையில் மாற்றமா: சென்னை அணியில் தொடரும் தோனி

மும்பை: ஐ.பி.எல்., 18வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் விரைவில் நடக்க உள்ளது. சமீபத்தில் ஐ.பி.எல்., நிர்வாகம், அதன் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் ஏலத்திற்கு முன், அணியில் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 7 ஆக உயர்த்த கோரிக்கை எழுந்தது. 'மெகா' ஏலத்தற்கு பதிலாக 'மினி' ஏலம் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது.சென்னை அணி நிர்வாகம் சார்பில், முன்னாள் கேப்டன் தோனியை அணியில் தக்கவைத்துக் கொள்ள, பழைய விதிமுறையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, ஓய்வு பெற்ற வீரர்கள் 5 ஆண்டுகளை கடந்துவிட்டால் அவர்கள் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களாக ('அன்கேப்ட் பிளேயர்') கருதப்படுவர். அவர்களை குறைந்தபட்சம் ரூ. 20 லட்சத்திற்கு தக்கவைக்க முடியும். இந்த விதிமுறை 2008 முதல் 2021 வரை இருந்தது. பின், 2021ல் நீக்கப்பட்டது.இந்த ஆண்டு இந்த விதிமுறை மீண்டும் கொண்டு வந்தால் கடந்த 2020ல் ஓய்வு பெற்ற தோனி, ரூ. 4 கோடிக்கு சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார். இல்லையென்றால் ரூ. 12 கோடி வழங்க வேண்டும். இதன்மூலம் சென்னை அணி கூடுதலாக ரூ. 8 கோடிக்கு வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். சில அணிகளின் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காசி விஸ்வநாதன் மறுப்பு

சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) காசி விஸ்வநாதன் கூறுகையில், ''தோனியை 'அன்கேப்ட்' வீரராக அறிவிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள், பழைய விதிமுறையை கொண்டு வரும் படி பி.சி.சி.ஐ.,யிடம் கோரவில்லை. பி.சி.சி.ஐ., தான் இவ்விதிமுறையை கொண்டு வரப்போவதாக தெரிவித்தது,'' என்றார்.

வருவாரா 'தல'

சமீபத்தில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவது குறித்து தோனி கூறியிருந்தார். இதில், ''அடுத்த சீசனுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. வீரர்களை தக்கவைப்பது குறித்து ஐ.பி.எல்., நிர்வாகம் வெளியிடும் விதிமுறைகளை பொறுத்துதான் முடிவு செய்யப்படும். சென்னை அணி நிர்வாகத்துடன் பேசி, அதன்பின் பங்கேற்பது குறித்து தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ