செஸ் உலக சாம்பியன் குகேஷ் * கடைசி சுற்றில் கலக்கல் வெற்றி
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற இளம் வீரர் என சாதனை படைத்தார் குகேஷ். கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார். சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியனும்', உலகின் 'நம்பர்--15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடினர். மொத்தம் 14 சுற்று கொண்ட இதில், 13 சுற்று முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளி பெற்று, சம நிலையில் இருந்தனர். கடைசி, 14வது சுற்று இன்று நடந்தது. இதில் வெல்லும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. இம்முறை குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டியின் 50 வது நகர்த்தலின் போது, 'டிரா' நோக்கிச் சென்றது போல இருந்தது. ஆனால் குகேஷ் வெற்றிக்காக போராடினார். 55வது நகர்த்தலில் லிரென், தனது யானையை தவறான இடத்தில் நகர்த்தி பெரிய தவறு செய்தார். வாய்ப்பை துல்லியமாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ், 58 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 7.5 புள்ளியுடன் புதிய உலக சாம்பியன் ஆனார். 18 வயதான குகேஷ், உலக செஸ் சாம்பியன் ஆன, இளம் வீரர் என சாதனை படைத்தார். ஆனந்திற்கு அடுத்து...இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 55. ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் (2007-2013) பட்டம் வென்றார். தற்போது ஆனந்துக்குப் பின் உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ்.