சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகரணை கிராமத்தில், 40 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த 2004ம் ஆண்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சாலை மற்றும் பொது இடங்களில் வசித்து வந்த 40 நரிக்குறவர் குடும்பத்தினரை, வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்குவதாக கூறி, அரசு அதிகாரிகள் சிறுகரணை கிராமத்தில் குடி அமர்த்தினர்.கடந்த 20 ஆண்டுகளாக பட்டா வழங்க வேண்டும் என, நரிக்குறவர் மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை. அதனால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாமல், அவர்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நாங்கள், பல ஆண்டுகளாக சோத்துப்பாக்கம் ஏரிக்கரை அருகே வசித்து வந்தோம். கடந்த 2004ம் ஆண்டு, வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்குவதாக கூறி, அரசு அதிகாரிகள், 40 குடும்பத்தினரை இங்கு இடமாற்றம் செய்தனர்.தற்போது, வரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால், அரசு சலுகைகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தால், நாங்கள் தற்போது வசிக்கும் இடம் மேய்க்கால் புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ளதாக கூறி, பட்டா வழங்க மறுக்கின்றனர்.மத்திய அரசின் பி.எம்., ஜன்மேன் திட்டத்தில், 40 குடும்பத்தினருக்கும், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுமனைப் பட்டா இல்லாததால், கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, 40 நரிக்குறவர் குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.