சென்னை:சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா பிரதான சாலையில், போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, போதை மாத்திரை விற்பனை செய்த எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சரிதா, 25, பூபதி, 21, கார்த்திக், 26, ராஜேஷ், 21, ஈஸ்வர், 20 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 'டாப்சின் டேபெண்டடோல்' என்ற 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சரிதாவின் கணவன் சரவணன் என்பவர், போதை மாத்திரை விற்பனை செய்து வந்துள்ளார். 2023ம் ஆண்டு போதை மாத்திரை விற்பனையில் ஏற்பட்ட தகராறில், அஜய் என்பவரை கொலை செய்த வழக்கில், சரவணன் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மனைவி சரிதா போதிய வருமானம் இல்லாததால், தன் கணவர் நடத்தி வந்த போதை மாத்திரை விற்பனையை தொடர்ந்துள்ளார். கணவரின் நண்பர்களான, பல்லாவரத்தை சேர்ந்த வினோத், கண்ணகி நகரை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் உதவியுடன், பெங்களூரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது.