| ADDED : ஆக 06, 2024 02:40 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. அதன் கலங்கல் உள்ள முகப்பு பகுதியில், திருக்கழுக்குன்றம் சாலை கடக்கிறது.வடகிழக்கு பருவகால மழைக்காலத்தில் ஏரி நிரம்புகிறது. உபரிநீர் வெளியேறி, சாலையில் பாய்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமின்றி, அப்பகுதியில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்கிறது.அப்பகுதியில், நீண்டகாலத்திற்கு முன், வாகன போக்குவரத்து குறைவு. ஏரி உபரிநீரால் சாலை சேதமாகாமல் தவிர்க்க கருதி, ஏரி முகப்பு பகுதி சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.தற்போது, வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் கடக்க சிரமமாக உள்ளது.ஸ்கூட்டர் புகைபோக்கியில் தண்ணீர் புகுந்து பழுதடைகின்றன. மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க, பாலம் அமையவேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.