சீரமைக்கப்படாத சட்டமங்கலம் சாலை வனத்துறை அனுமதி பெறுவதில் சிக்கல்
மறைமலை நகர்:சட்டமங்கலம் - வடமேல்பாக்கம் சாலை, 1.200 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், வடமேல்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையின் ஒரு பகுதி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி எல்லையிலும், மற்றொரு பகுதி காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், நாட்ராம்பட்டு ஊராட்சியிலும் உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அப்பகுதி கிராம மக்கள், அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.இந்த சாலை, பல ஆண்டுகளாக சிதிலமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் சென்று வர அவதியடைந்தனர்.கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து, கடந்த ஆண்டு முதல்வரின் கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 66.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.இந்த சாலையில், 100 மீட்டர் துாரம் சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளதால், இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க, வனத்துறையிடமிருந்து அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் சாலை அமைக்கப்பட்டது.தற்போது, இந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சீரழிந்து உள்ளது.இது குறித்து, அப்பகுதி கிராமவாசிகள் கூறியதாவது:இந்த பகுதியில், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளது. சிதிலமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.அவசர காலங்களில் பயணம் செய்வது சவாலாக உள்ளது. எனவே, விடுபட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சாலை அமைக்க, வனத்துறையிடம் இணையதளத்தில் முறையாக விண்ணப்பித்தால், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் பின் அனுமதி வழங்கப்படும்,'' என தெரிவித்தனர்.