உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காஞ்சியில் 5 சிலைகள் மாயமான வழக்கில் திணறல் உரிய பிரிவிடம் ஒப்படைப்பதிலும் தொடர் இழுபறி

காஞ்சியில் 5 சிலைகள் மாயமான வழக்கில் திணறல் உரிய பிரிவிடம் ஒப்படைப்பதிலும் தொடர் இழுபறி

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் கிராமத்திலிருந்து காவாந்தண்டலம் செல்லும் வழியில் உள்ளது கவுசலாம்பிகை உடனுறை திருமலை கோவில். நுாறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில், 2015 அக்., 30 இரவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கருவறையில் இருந்த, ஐம்பொன்னில் செய்யப்பட்ட, 2 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் தாயார் உற்சவ சிலைகள் திருடப்பட்டன. காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில், சன்னிதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 2015 நவ., 17ம் தேதி, ஐம்பொன்னால் செய்த உற்சவ விநாயகர் சிலை திருடப்பட்டது. இந்த இரு சிலைகள் திருடப்பட்டது குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குகூட இன்னும் மாற்றப்படாமல், விசாரணை தடைபட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள சிவன்கூடல் கிராமத்தில் சிதிலமடைந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு இருந்த சோமாஸ்கந்தர் சிலை பல ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது. அச்சிலை திருடப்பட்டது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது.பின், 2002ல், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து, சிங்கப்பூர் 'ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம்' வாங்கியது. அங்கு வைக்கப்பட்டுள்ள இந்த சோமாஸ்கந்தர் சிலை, சொந்த ஊர் திரும்பவில்லை. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, கிருஷ்ணதேவராயர் கால ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலையும், சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில் காட்சிப்பொருளாக உள்ளது. இச்சிலை, 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருடப்பட்டிருக்கலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில், இச்சிலை இருந்ததற்கு எந்த ஆதாரமும் கோவிலில் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.ஆனால், சோமாஸ்கந்தர் சிலை, காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்றும், ஏகாம்பரநாதர் கோவிலுக்காக இச்சிலை உருவாக்கப்பட்டது என்றும், 'ஏசியன் ஆர்ட் மியூசியத்தின்' இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, இக்கோவிலில், விநாயகர், அம்மன் என, 16 சிலைகள் ஆவணம் இன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பல்வேறு ஊர்களில் உள்ள சுவாமி சிலைகளை மீட்பதும், அவை இருக்கும் இடங்களை கண்டுபிடிக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து திருடப்பட்ட சிலைகளை விரைவில் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி