| ADDED : மே 25, 2024 06:31 PM
செங்கல்பட்டு:செய்யூர் தாலுகாவில், நீலமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.இந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கல்வித்துறை தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பின், 2013ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.அதன்பின், அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.