செய்யூர்:லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.மாநிலம் முழுதும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பறக்கும் படையினர் வாகன சோதனையில், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த குமாரலிங்கம் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 2.07 லட்சம் ரூபாய் கொளத்துார் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது.சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் பகுதியில், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த நியாஸ் முகமது என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 4.85 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.சித்தாமூர் பகுதியில், திருச்சியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல, சோத்துப்பாக்கம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது, சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த செல்வி என்பவரிடம் இருந்து, 1.41 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.செய்யூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, மொத்தம் 11.33 லட்சம் ரூபாய் பொதுமக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.ஆனால், நேற்று முன்தினம் இரவேடு இரவாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சியினர் இருவரும், தலா 200 ரூபாய் என, செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூணாம்பேடு, சித்தாமூர், கூவத்துார், கடப்பாக்கம், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர்.பறக்கும் படையினர் வாகன சோதனையில் காட்டிய ஆர்வத்தை, அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதில் காட்டாமல் அலட்சியமாக செயல்பட்டதாக, பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.