உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முழுமை பெறாத மழைநீர் வடிகால் பணி: இடைக்கழிநாடு பேரூராட்சியில் புகார்

முழுமை பெறாத மழைநீர் வடிகால் பணி: இடைக்கழிநாடு பேரூராட்சியில் புகார்

செய்யூர்:திருவண்ணாமலை மாவட்டம், போளூர் - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், 110 கி.மீ., நீளமுடைய சாலையின் விரிவாக்க பணி, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.சாலை விரிவாக்கத்திற்காக, திட்ட வரைபடத்தின்படி செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் பகுதியில், சாலையில் இருபுறமும், 950 மீட்டர் நீளத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.இதனால், கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது, மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதியில், மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.இந்நிலையில், குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்காதபடி, கழிவெளி வரை கூடுதலாக 900 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.இருப்பினும், தற்போது வரை வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.நேற்று முன்தினம், மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., தியாகராஜன் மற்றும் போளூர் - செய்யூர் சாலை விரிவாக்கத்திட்ட கோட்ட பொறியாளர் லட்சுமிநாதனிடம், 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.குடியிருப்பு பகுதி உள்ள 950 மீட்டர் நீளத்திற்கு மட்டும் மழைநீர் வடிகால் அமைக்க, திட்ட வரைபடத்தில் உள்ளது.மீதம் உள்ள பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து குறிப்பிடவில்லை. விடுபட்ட பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.ஒரு வாரத்தில் அளவீடு செய்து, திட்ட அறிக்கை தயார் செய்து அதிகாரிகளுக்கு அனுப்பி, அனுமதி கிடைத்தவுடன் வடிகால் அமைக்கப்படும் என, கோட்ட பொறியாளர் லட்சுமிநாதன் தெரிவித்தார். அதனால், போராட்டத்தை கைவிட்டு அப்பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்