உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கட்டிய பணம் ரூ.27.58 லட்சம் வீடு தாமதமானதால் திருப்பித்தர உத்தரவு

கட்டிய பணம் ரூ.27.58 லட்சம் வீடு தாமதமானதால் திருப்பித்தர உத்தரவு

சென்னை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டை ஒப்படைக்க தவறிய கட்டுமான நிறுவனம், அதற்காக வசூலித்த, 27.58 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா, மன்னிவாக்கம் பகுதியில் 'ஜென்யுன் டெவலப்பர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், 42.72 லட்சம்ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்க, ஆர்.கவுதம் என்பவர், 2022ல் ஒப்பந்தம் செய்தார். இதன் அடிப்படையில் வீட்டின் விலையில், 27.58 லட்ச ரூபாய் வரை அவர் செலுத்தியுள்ளார். வீட்டுக்கான ஒப்பந்தப்படி, 2022 ஜூலையில் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், அந்த குறிப்பிட்ட இடத்தில் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் துவங்கவில்லை என்பது பணம் செலுத்திய கவுதமுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கட்டுமான நிறுவனத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு கட்டுமான நிறுவனம் உரிய பதில் அளிக்காத நிலையில், ஆர். கவுதம், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: இதில் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டுமான பணிகளை முடித்து வீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. மேலும் இந்த வழக்கில் பல முறை தகவல் தெரிவித்தும், அழைப்பு விடுத்தும் கட்டுமான நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. இதையடுத்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்ட விதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காததால், அதற்காக அந்நிறுவனம் வசூலித்த, 27.58 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். மேலும் வழக்கு செலவுக்காக, மனுதாரருக்கு, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இது தொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !