கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட பிருந்தாவனம் தெருவில், மின்கம்பத்தின் அருகில் வேப்பமரம் ஒன்று உள்ளது.நேற்று மாலை, திடீரென காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அந்த வேப்பமரம் சாய்ந்து, மின் கம்பத்தின் மீதுள்ள மின் கம்பியில் விழுந்ததில், மின் கம்பி துண்டாகி விபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது.இது குறித்து, முதலாவது வார்டு கவுன்சிலர் மு.நாகேஸ்வரன், ஊரப்பாக்கம் மேற்கில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பியில் சாய்ந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றி சீரமைத்தனர்.சீரமைப்பு பணியால், அருள் நகர், யமுனை நகர் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த வண்டலுாரில், நேற்று மாலை 5:00 மணி அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து 10 நிமிடங்கள் வீசிய சூறைக்காற்றில், சிங்காரத்தோட்டம் பகுதியில், ரயில் பாதை சுற்றுச்சுவர் உட்பக்கமாக உள்ள மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.இதில், மின் கம்பத்தில் இருந்து மசூதி தெருவுக்கு செல்லும் மின் கம்பிகள், ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியதால், உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள், அப்பகுதி முழுதும் மின் இணைப்பை துண்டித்து, சரிந்து விழுந்த மின்கம்பத்திற்கு பதிலாக புதிய கம்பத்தை நடும் பணியை துவங்கினர். இதனால், சிங்காரத் தோட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் இருளில் மூழ்கின.