மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் திருத்தேரை, ஆகம முறைப்படி கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ 108 திவ்ய தேச கோவில்களில், 63வதாக சிறப்புபெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர் அருள்பாலிக்கின்றனர்.கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில், ஸ்தலசயன பெருமாள், அவதார ஜெயந்தி உற்சவத்தில், பூதத்தாழ்வார் ஆகியோர், திருத்தேரில் உலா செல்வர். நீண்டகாலத்திற்கு முன், சகடை தேர் பயன்படுத்தப்பட்டது. துவக்கத்தில், தேர் கோவில் வளாகம் வெளியே நிறுத்தப்பட்டது.சென்னை பக்தர் வசந்த் ஷேன்பாக் என்பவர், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கமல வடிவ மரத்தேர் செய்து, நன்கொடையாக அளித்தார்.புதிய தேர், கோவிலுக்கு முன் உள்ள தேரடி அருகில், கோவில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டது. அதற்கு பாதுகாப்பு கூரையும் அமைக்கப்பட்டதுதற்போது, கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பணிகள் வாஸ்து ஆகம பரிசீலனையின்போது, திருத்தேரை கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இடம் மாற்றவில்லை.இந்நிலையில், பிரம்மோற்சவ திருத்தேர் உலா முடிந்து, தேரை பாதுகாப்பு கூரையில் நிறுத்துவதை தவிர்த்து, அதன் அருகில், வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ஆகம முறைப்படி, ”கோவில் வளாகத்திற்கு வெளியே தேர் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கூரையை பிரித்து, தேருக்கு பாதுகாப்பாக மாற்றி அமைக்கப்படஉள்ளது,” என்றார்.