முட்டுக்காடு முகத்துவாரத்தில் துார் வாரும் பணிகள் தீவிரம்
திருப்போரூர்:பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது.அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழை நீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.வழக்கமாக, நீர் சுழற்சியின் காரணமாக, மேற்கண்ட முகத்துவார பகுதியில், அவ்வப்போது மணல் சேர்ந்து திட்டுகள் உருவாகும். இவற்றால் மழை நீர் கடலில் சேராமல், குடியிருப்புகளை சூழும்.எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க, நீர்வளத் துறை முடிவு செய்தது.இதையடுத்து, நீர்வளத்துறை வாயிலாக, செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவார மண் திட்டுக்களை அகற்றும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக, முகத்துவரத்தில் துார் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.