| ADDED : ஜூன் 24, 2024 06:29 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுபேர்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லியங்குணம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கல்லியங்குணத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில், குடிநீர் கிணறு உள்ளது.குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஏரியின் நடுவே, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருந்தது.இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஏரியில் நீர் நிரம்பி வருகிறது. இதனால், கிணற்றில் ஏற்பட்ட நீரூற்றின் காரணமாக, நேற்று அதிகாலையில் திடீரென சுற்றுசுவர் இடிந்து, கிணற்றுக்குள் விழுந்து தரைமட்டமானது.இதனால், மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, எலப்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகம் சார்பாக, மற்ற குடிநீர் கிணற்றில் இருந்தும், ஆழ்துளை கிணற்றில் இருந்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர்.புதிய குடிநீர் கிணறு அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.