| ADDED : ஜூலை 05, 2024 12:46 AM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில், வெங்கடாபுரம், தெள்ளிமேடு, சாஸ்திரம்பாக்கம் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன.இவற்றில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிவாசிகள் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.இவர்களின் அன்றாட குடிநீர் தேவைக்காக, வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலக வளாகத்தில், கடந்த 2019 - 20ல், செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதி, 8.75 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.அது, கடந்த ஒரு வார காலமாக பழுதடைந்துள்ளதால், மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீருக்கு அவதிபட்டு வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக, குடிநீர் முறையாக வராத காரணத்தால், வெளியில் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. தண்ணீருக்கே அதிகமாக செலவுசெய்யும் நிலை உள்ளது.எனவே, இந்த சுத்தி கரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரத்தை பழுது நீக்கம் செய்ய, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.வெங்கடாபுரம் ஊராட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 'சாப்ட்' எனும் பொருள் பழுதடைந்துள்ளது. பழுது நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஓரிருநாட்களில், பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் குடிநீர் சீராக வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.