சென்னை: தமிழகத்தில், நலிந்துவரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், மாநகர மக்களுக்கும் நாட்டுப்புற கலை அனுபவத்தை வழங்கவும், தமிழக அரசு 'நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், முன்னணி நகரங்களில் கலை விழாக்களை நடத்துகிறது. அந்த வகையில், சென்னையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நான்கு நாட்கள் இந்த விழாவை நடத்த கலை பண்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 1,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும், 500க்கும் மேற்பட்ட செவ்வியல் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். துவக்கவிழாவில் முதல்வர் ஸ்டாலின்; நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்க உள்ளனர். இதில், தமிழர்களின் பாரம்பரிய இசையான மங்கல இசை, தவில் இடம்பெறும். தொடர்ந்து, நையாண்டி மேளம், தோல் பாவைக் கூத்து, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகம், காளையாட்டம், தேவராட்டம், மள்ளர் கம்பம், தெம்மாங்கு பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. வெளிமாநில கலைஞர்கள் பங்கேற்கும், அந்தந்த மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. தொடர்ந்து, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் இந்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.