| ADDED : ஜன 30, 2024 11:29 PM
சென்னை:இலங்கையில் இருந்து சென்னை வரும் பயணியர் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், இதற்கு விமான நிறுவன பிக்கப் வாகன டிரைவர் உதவுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சென்னை விமான நிலைய, அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படை அதிகாரிகள் விமான நிலைய ஓடுபாதையில் காத்திருந்தனர்.நேற்று அதிகாலை 4:20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. பிக்கப் வாகனத்தை இயக்கும் டிரைவர் ராஜ்குமார், 35, என்பவர் இரண்டு பயணியரின் சிறிய பைகளை எடுத்து பத்திரப்படுத்தினார். கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரிகள், இரண்டு பைகளையும் எடுத்து சோதித்தனர். அதனுள் தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்டுகள் இருந்தன.அதில் 5.5 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 3.3 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, டிரைவர் ராஜ்குமாரை கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த முகமது அக்ரம், 30, முகமது வாசிம், 28, ஆகிய இரண்டு பயணியர் தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிந்தது. சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை மற்றும் சுங்க சோதனை பிரிவுகளில் சோதனைக்காக நிற்பதாகவும் கூறினார்.மேலும் இந்த தங்கத்தை ராஜ்குமார் அவர்களிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மூவரிடமும் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த கடத்தல் கும்பலின் தலைவன் ரிபாயூதீன், 45, என்பவரின் ஏற்பாட்டில் இந்த கடத்தல் நடந்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது.இதையடுத்து,சென்னையில் ரிபாயூதீனையும் கைது செய்தனர். இவர், நான்கு மாதங்களுக்கு முன் கடத்தல் வழக்கு ஒன்றில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்து, மீண்டும் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.