அங்கன்வாடி கட்டடம் பாழ் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் நெடுங்கல் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், அங்கன்வாடி மையம், 20 குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு பழமையானதால், தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதேப் பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 14.31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மையம் கட்டட பணி நடந்து வருகிறது. ஆனால், பழைய கட்டடம் இடித்து அகற்றப்படாமல் உள்ளது.எனவே, பள்ளி வளாகம் அருகே உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.