மதுராந்தகம்: கருங்குழியில் உள்ள பயணியர் நிழற்குடையை தவிர்த்து, பிற இடத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். மதுராந்தகம் பகுதியில், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கருங்குழி, மேலவலம்பேட்டை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. சாலையின் இரு மார்க்கத்திலும், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இதில், மதுராந்தகத்தில் இருந்து மேலவலம்பேட்டை வழியாக வேடந்தாங்கல், உத்திரமேரூர் பகுதிக்கு செல்லும் புறவழிச்சாலையில், ஒரு பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த புறவழிச்சாலை முழுதும் தனியார் வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து வரும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், மேலவலம்பேட்டையில் உள்ள நிழற்குடையில் நிறுத்தப்படுவதில்லை. மாறாக, மதுராந்தகத்திலிருந்து மேலவலம்பேட்டை வழியாக, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பில் பேருந்துகளை நிறுத்துகின்றனர். இதனால், சாலையை கடப்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி, பயணியரை ஏற்றிச் செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, மேலவலம்பேட்டை, கருங்குழி போன்ற பகுதிகளில், புறவழிச்சாலையில் உள்ள நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி சென்றால், விபத்துகள் தவிர்க்க முடியும். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.