உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காஞ்சியில் ஓட்டு எண்ணும் மையம்...தயார்! ஸ்ட்ராங்க் ரூம் அமைக்கும் பணி ஜரூர்

காஞ்சியில் ஓட்டு எண்ணும் மையம்...தயார்! ஸ்ட்ராங்க் ரூம் அமைக்கும் பணி ஜரூர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்படுகிறது. கேமரா பொருத்துவது, சாரம் கட்டுவது, உயர்ரக பாதுகாப்பு அறை அமைப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், காஞ்சி புரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்படுகிறது. 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மையம், திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு எண்ணும் மையம், அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லுாரியிலேயே அமைக்கப்படுகிறது.

'ஸ்ட்ராங்க் ரூம்'

இம்முறை ஓட்டு எண்ணும் மையத்தில் சாரம் கட்டுவது, அறைகளை தயார் செய்வது என அனைத்து வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அண்ணா பல்கலை கல்லுாரி, தரை தளத்துடன் கூடிய இரு தளங்களுடன் இருப்பதால், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என இரு தளங்களிலும் ஒட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், இரண்டாம் தளத்தில், செய்யூர், திருப்போரூர், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையங்கள் தயார் செய்யப்படுகிறது.தேர்தலன்று ஓட்டுப்பதிவு முடிந்த பின், அனைத்து ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இந்த மையத்திற்கு கொண்டு வரப்படும். அதற்கான உயர்ரக பாதுகாப்பு அறை - 'ஸ்ட்ராங்க் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரம் ஆகியவை வைக்கும் 'ஸ்ட்ராங்க் ரூமின்' அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டு, பிளைவுட் மூலம் சீலிடப்பட்டுள்ளன.இதனுள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீலிடப்படும். அதைத் தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி, ஓட்டு எண்ணும் நாளில் தான் திறக்கப்படும்.ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரமும் வரிசைப்படி 'ஸ்ட்ராங்க் ரூமில்' வைப்பதற்கு, வரைபடமாக வரையப்பட்டு, எண்கள் ஒட்டப்படுகின்றன. இயந்திரங்கள் அந்தந்த எண்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும்.அதேபோல், ஓட்டு எண்ணும் அறையில், வேலி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சட்ட சபை தொகுதி ஓட்டு எண்ணும் அறையில், ஒவ்வொரு மேஜைக்கும், தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மொத்தம் 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. மின்சார விளக்கு, பேன், தண்ணீர் வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

கண்காணிப்பு

வேட்பாளர்களுடன் வரும் பூத் ஏஜெண்டுகள் மற்றும் ஓட்டு எண்ணும் பணிக்கு வரும் அரசியல் கட்சியினர், தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்ய, கல்லுாரிக்கு வெளியே விசாலமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கல்லுாரியின் வளாகம், வாசல், தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என என அனைத்து இடங்களிலும், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.அனைத்து கேமராக்களையும் கண்காணிக்கும் வகையில், நான்கு டிவி திரைகள் அமைத்து கட்டுப்பாட்டு அறை செயல்படுகின்றன.ஓட்டு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் கலைச்செல்வி அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஓட்டு எண்ணும் மையத்தில், கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி.,சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.தேர்தலன்று ஆறு சட்டசபை தொகுதியிலிருந்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலை கல்லுாரியின் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.செய்யூர், திருப்போரூர், அச்சிறுபாக்கம் போன்ற இடங்களில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தலன்று இம்மையத்திற்கு வந்து சேர நள்ளிரவு ஆகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஓட்டு எண்ணும் மையத்தின் அனைத்து பணிகளும் ஒரு சில நாட்களில் முடியும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ