ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் தி.மு.க., பிரமுகரின் கடை அகற்றாததால் குமுறல்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் அரசு மருத்துவமனை முன், நடைபாதை மற்றும் அணுகுசாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன.இதுகுறித்து, அப்பகுதி வியாபாரிகள் கூறியதாவது:அரசு மருத்துவமனை முன், சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் வியாபாரம் செய்ய கூடாது என தெரிவித்து, இப்பகுதியில் இருந்து அனைத்து கடைகளையும் அகற்றிவிட்டனர்.ஆனால், மருத்துவமனை முன், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து, டீக்கடை நடத்தி வரும் தி.மு.க., பிரமுகரின் கடையை மட்டும் அகற்றாமல் விட்டு விட்டனர்.எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதில், நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டியுள்ளது. ஒட்டுமொத்த கடைகளும் அகற்றப்பட வேண்டும். அகற்றப்படாமல் உள்ள தி.மு.க., பிரமுகரின் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.