கண்துடைப்பிற்கு ஒரு பேனர் அகற்றம் அலட்சிய அதிகாரிகளால் அதிருப்தி
செங்கல்பட்டு : செங்கல்பட்டு முதல் வண்டலுார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலை ஓரமாக, 200க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.இந்த விளம்பர பேனர்களால் கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்களோடு மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது.தவிர, பெரும் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதும் மாதம்தோறும் நடக்கிறது.தவிர, காற்று பலமாக வீசும் போதும், உறுதித்தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழவும் அதிக வாய்ப்புள்ளது.எனவே, இந்த ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் புகார் எழுப்பி இருந்தனர்.இது குறித்து நம் நாளிதழில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, நம் நாளிதழில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட பேனரை மட்டும், அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.இந்நிலையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ராட்சத விளம்பர பேனர்களையும் அகற்ற காவல் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.