மின் இணைப்பிற்கு ரூ.4,000 லஞ்சம் மின் வாரிய வணிக உதவியாளர் கைது
குன்றத்துார்,குன்றத்துார் அருகே புதுப்பேர் ராயல் சிட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டிய மனோகரன். இவர், தன் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க, சோமங்கலம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் வணிக உதவியாளர் ஆண்ட்ரூஸ், 35, என்பவர், மனோகரனை தொடர்பு கொண்டு புதிய மின் இணைப்பு வழங்க, 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து, மனோகரன் சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மனோகரனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.நேற்று மனோகரனின் வீட்டிற்கு சென்ற மின் வாரிய வணிக உதவியாளர் ஆண்ட்ரூஸ், 4,000 ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.,பிரியதர்ஷினி மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் ஆண்ட்ரூஸை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.