நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
திருப்போரூர்:மானாமதி ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் மானாமதி, சந்தினாம்பட்டு, அகரம், தட்சணவர்த்தி உள்ளிட்ட கிராமங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த ஊராட்சியில், 500 ஏக்கருக்கும் மேல், நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில், மானாமதி ஊராட்சி பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் விளைந்து, தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளன. வழக்கமாக, இப்பகுதியில் அறுவடை நடக்கும் போது, தனியார் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கிச் செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, மானாமதி ஊராட்சி பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.