பள்ளி அருகே கொட்டப்படும் மாட்டு சாணத்தால் துர்நாற்றம்
மறைமலை நகர்:செட்டிபுண்ணியம் கிராமத்தில், அரசு துவக்க பள்ளி அருகே, மாட்டு சாணம் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டி புண்ணியம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழில். கால்நடை வளர்ப்போர், மாட்டு சாணம் மற்றும் அதனுடன் இணைந்த கழிவு பொருட்களை கிராமத்தின் தெருக்கள் ஓரம் பல்வேறு இடங்களில் கொட்டி வருகின்றனர். குறிப்பாக செட்டிபுண்ணியம் அரசு துவக்க பள்ளி அருகே கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மக்கள் கூறியதாவது: அரசு துவக்க பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம், எதிரே நுாலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இங்கு மாட்டு சாணம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாட்டு சாணம் கொட்டப்பட்டு வருவதை தடுக்க உள்ளாட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.