செங்கை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு வார்டு துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், வடகிழக்கு பருவமழையையொட்டி, காய்ச்சல் பிரிவுக்கு சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், புறநோயாளிகாவும், உள் நோயாளிகாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மருத்துவமனை வளாகத்தில், காய்ச்சல் பிரிவுக்கு உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு வார்டில், 40 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, ஐந்து டாக்டர்கள், செவிலியர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன் கூறியதாவது:வடழகிழக்கு பருவமழையை ஒட்டி, காய்ச்சல் பிரிவுக்கு சிறப்பு வார்டு துவங்கப்பட்டு உள்ளது. தற்போது, எட்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும், இந்த சிறப்பு வார்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.