மீண்டும் மழைநீரில் தத்தளிக்கும் கடப்பாக்கம் அவசர கூட்டம் நடத்தியும் பயனில்லை
செய்யூர், செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 30,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.குடியிருப்புப் பகுதியை விட, கிழக்கு கடற்கரை சாலை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு ஓதியூர், பனையூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புப் பகுதியில் தேங்கியது.மேலும், பல இடங்களில் மழைநீர் வெளியேற, சாலை நடுவே பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆகையால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்வாய் மற்றும் நீர் வழித்தடங்களை சீரமைக்கவும், சாலையை துண்டிக்க வாய்ப்புள்ள இடங்களில் குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கி, அப்பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, பேரூராட்சி கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது:கடந்த ஆக., மாதம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அவசர கூட்டம் நடத்தி, தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மண் கொட்டி சீரமைத்தல், சாலைகள் நடுவே குழாய்கள் பதிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், பருவமழையால் கடப்பாக்கம், நயினார்குப்பம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி, அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.