மதுராந்தகம்:மதுராந்தகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், ஒரத்தி, வேடந்தாங்கல், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். 2.10 ஏக்கர் பரப்பளவு
செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற நகரப் பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், பேருந்து நிலையம் பழமையானதால், மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்காக, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பேருந்து நிலைய கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்திடம், ஆறு மாத காலத்திற்குள், அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை, மதுராந்தகம் வடக்கு பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணியரின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டுள்ளன என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வசதிகள்
புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்தில், 21 கடைகள், 16 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு இடவசதி, இரண்டு பயணியர் காத்திருப்பு அறை, பாலுாட்டும் தாய்மார்கள் அறை, நேரக் காப்பகம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து நிலையத்தின் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்குமான பாதை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.வரும் காலங்களில், முதல் தளம் அமைத்து, மேலும், 21 கடைகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட உள்ளது.புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. அதன் பின் கட்டுமான பணிகள் துவங்கின.இந்நிகழ்வில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் நகரசபை தலைவர் மலர்விழி, நகராட்சி கமிஷனர், நகராட்சி பொறியாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.