மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. வைணவ சமய 108 திவ்ய தேசங்களில், 63ம் கோவிலாக விளங்குகிறது.தன்னை தரிசிக்க தவமிருந்த புண்டரீக முனிவருக்கு, தரையில் படுத்து, புஜங்க சயன திருக்கோலத்தில், இறைவன் ஸ்தலசயன பெருமாள் காட்சியளித்த தலம் இது. இங்கு கோவில் கொண்டு, நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர்.இறைவன், எளிய மனிதராக நிலத்தில் படுத்த தலம் என்பதால், நிலம், சொத்து, மனை ஆகியவை சார்ந்த பிரச்னைகள் மற்றும் தோஷங்கள் ஆகியவற்றுக்கு, பரிகார கோவிலாக சிறப்பு பெற்றது.இங்கு, 3.51 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, இன்று காலை 7:00 மணி - 9:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.நிலமங்கை தாயார், கமலத் தொட்டியில் மாலை 4:30 மணிக்கு புறப்பாடு சேவை நடைபெறுகிறது. பெருமாள், தாயாருடன், 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையாற்றுகிறார்.மேலும், சேஷ வாகனத்தில் அவரும், ஹம்ச வாகனத்தில் பூதத்தாழ்வாரும், இரவு 7:00 மணிக்கு வீதியுலா செல்கின்றனர். 1998க்கு பின், 25 ஆண்டுகள் கடந்து, தற்போது தான் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
மாமல்லபுரத்திற்கு, அரசு, மாநகர் பேருந்துகள் ஏற்கனவே குறைவாக இயக்கப்படுகின்றன. பயணியர் போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர்.திருவான்மியூர், தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து, இப்பகுதிக்கு மாநகர் பேருந்துகளும், செங்கல்பட்டிலிருந்து, அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இங்கு வரவும், திரும்பவும், பேருந்திற்காக சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இன்று நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, பக்தர்கள் அதிக அளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு, பக்தர்கள் எளிதாக வந்து செல்ல, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.