| ADDED : நவ 23, 2025 01:56 AM
திருப்போரூர்: செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., செயற்குழுக் கூட்டம் திருப்போரூரில் நடந்தது. மாவட்ட பொருளர் குமரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் தேசிங்கு, பொதுக்குழு உறுப்பினர் ஜெயபாலன், சாஞ்சி சேகர், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் நகர செயலர் விஜயகுமார் வரவேற்றார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் லோகநாதன் பங்கேற்று, கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் 2026 தேர்தலுக்கான நிதி சேகரித்தல் உள்ளிட்டவை குறித்து பேசினார். திருப்போரூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சசிகலா உட்பட 150 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: கோவளத்தில் 4,500 ஏக்கர் பரப்பளவில் 371 கோடி ரூபாய் மதிப்பில் நீர்த்தேக்கம் உருவாக்க அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இள்ளலுார் பகுதியில் தனியார் நிறுவன கேளிக்கை மையம் அமைய உள்ளதால் மக்களின் வசதிக்காக திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் வழியாக தாம்பரத்திற்கு கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கக் வேண்டும். திருப்போரூரில் போக்குவரத்து காவல் நிலையம் உருவாக்கி, போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னாள் நகர செயலர் துரை நன்றி கூறினார்.