மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம் டூ-வீலர் நிறுத்தமாக மாறிய அவலம்
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் சுற்றுவட்டாரத்தில் உள்ள, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், கல்லுாரி படிக்கச் செல்லும் மாணவர்கள், மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம், எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் பகுதியில் இருந்து வரும் விரைவு, அதிவிரைவு மற்றும் சொகுசு பேருந்துகள், மேல்மருவத்துார் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.இதன் காரணமாக, பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணியர், மேல்மருவத்துாரில் இருந்து பயணம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர்.தற்போது, பேருந்தில் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வரும் பயணியர், இருசக்கர வாகனங்களை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் பேருந்து நிழற்குடை உள்ள பகுதியிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால், கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில், பேருந்து பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலையோரம் ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்திச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.