உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாதாள சாக்கடை கான்கிரீட் மூடிகள் தரமின்றி நொறுங்குவதால் அபாயம் மாமல்லபுரத்தில் வாகன ஓட்டிகள் அவதி

பாதாள சாக்கடை கான்கிரீட் மூடிகள் தரமின்றி நொறுங்குவதால் அபாயம் மாமல்லபுரத்தில் வாகன ஓட்டிகள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பாதாள சாக்கடையில் பொருத்தப்படும் தரமற்ற கான்கிரீட் மூடிகள் அடிக்கடி நொறுங்கி பள்ளம் ஏற்படுவதால், தரமான மூடிகள் பொருத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள வீடுகள், கடைகள், விடுதிகள் உள்ளிட்டவற்றின் கழிவுநீரை வெளியேற்றும் வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. சாக்கடையில் ஏற்படும் அடைப்பை நீக்க, குறிப்பிட்ட துார இடைவெளியில், ஆள் நுழைவு திறப்புகள், கான்கிரீட் மூடியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட சாலைகளில், கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இச்சாலை பகுதிகளில், கனரக வாகன எடையை தாங்கும் வகையில், பாதாள சாக்கடையின் கான்கிரீட் மூடிகளை அமைக்க வேண்டும். ஆனால், மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கான்கிரீட் மூடிகள் தரமற்றதாக உள்ளதால், அவை வாகனங்களின் எடையை தாங்க முடியாமல் நொறுங்கி, இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். புகாரின்படி இவற்றை சரிசெய்யும் போது, மீண்டும் மீண்டும் தரமற்ற கான்கிரீட் மூடிகளை பொருத்துவதால், அவை மீண்டும் உடைகின்றன. மூடி நொறுங்கி இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சுற்றுலா பகுதியான மாமல்லபுரத்தில், போக்குவரத்து அதிகம் இருக்கும். எனவே, பாதாள சாக்கடைக்கு தரமான கான்கிரீட் மூடிகளை பொருத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை