திருக்கழுக்குன்றத்தில் பல்நோக்கு மையம் திறப்பு
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு மையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் நான்காவது வார்டு மாதுளங்குப்பம் பகுதியில், அன்னை சத்யா நகர் உள்ளது. இங்கு 160 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களின் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த, தனி அரங்க வசதியில்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் தேவைக்காக, பல்நோக்கு மையம் அமைக்குமாறு, தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடம், பேரூராட்சி தலைவர் யுவராஜ் பரிந்துரைத்தார். இதையடுத்து, அந்நிர்வாகம், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு அறைகளுடன் பல்நோக்கு மையத்தை தற்போது அமைத்தது. நேற்று நடந்த விழாவில், பேரூராட்சித் தலைவர் யுவராஜ், இந்த கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில், தாட்கோ அதிகாரிகள் பங்கேற்றனர்.