செங்கல்பட்டு:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம், மாமண்டூர் பாலாற்றில் மூன்று கிணறுகள் அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்தாண்டு பெய்த மழையால், பாலாற்றில் சென்ற அதிகப்படியான தண்ணீரால், குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.இதைத்தொடர்ந்து, கூடுதல் குடிநீர் வழங்கவும், பிரதான குழாய்கள் சீரமைக்க, 4.70 கோடி ரூபாய் நிதி கேட்டு, தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர். அதன்பின், நந்திவரம் - கூடுவாஞ்சேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில், புதியதாக நீர் உறிஞ்சு கிணறு மற்றும் பாலாற்றில் சேதமடைந்த குழாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.அதன்படி, மாநில நிதி ஆணையத்தின் ஊக்க நிதியிலிருந்து 4 கோடி ரூபாய்; மறைமலை நகர் நகராட்சி பொது நிதியில் இருந்து, 70 லட்சம் ரூபாய் என, மொத்தம் 4.70 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது.இதற்கான பூமி பூஜையை, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகரமன்ற தலைவர்கள் கார்த்திக், சண்முகம் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர். இதில், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தில், மாமண்டூர் பாலாற்றில் இருந்து தினமும், 21.70 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது. இதிலிருந்து, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, 6.50 லட்சம் லிட்டரும், மறைமலை நகர் நகராட்சிக்கு, 6.24 லட்சம் லிட்டரும், 19 கிராமங்களுக்கு 8.76 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.