படாளம் சர்க்கரை ஆலை குடோனில் நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட, நெல் மூட்டைகளை, படாளம் சர்க்கரை ஆலையில் உள்ள குடோன்களுக்கு கொண்டு சென்று, பாதுகாக்கும் பணி நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மூலமாக, 40 க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் குருவை சாகுபடியில், 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் நடவு செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடந்தன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக, கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சர்க்கரை ஆலையில் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணி தீவிரம்: மதுராந்தகம் அடுத்த படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டுக்கான அரவை பணி முடிவுற்றது. அதன் காரணமாக, மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தவிர்க்க, குடோன்களில் வைத்து பாதுகாக்கும் வகையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், கரும்பு அரவை பணி முடிவுற்று, சர்க்கரை பாதுகாப்பாக வைக்கும் குடோன்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, செய்யூர், மதுராந்தகம் வட்டாரங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, சர்க்கரை ஆலையில் உள்ள குடோன்களில் பாதுகாக்கும் பணிநடந்து வருகிறது. தற்போது, 5 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.