உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் நேரத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி சத்தம் குறைவால் பயணியர் அவதி

பஸ் நேரத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி சத்தம் குறைவால் பயணியர் அவதி

மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், பேருந்து அறிவிப்பு வெளியிடும் ஒலிபெருக்கியின் சத்தம் குறைவாக உள்ளதால், பேருந்தை தவறவிடும் பயணியர் கூடுதல் ஒலிபெருக்கி அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வரும் இந்த நிலையத்தில், பேருந்துகள் செல்லும் ஊரின் பெயர், புறப்படும் நேரம் குறித்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த ஒலிபெருக்கி பழுதடைந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஒலிபெருக்கி சீரமைக்கப்பட்டு, மழையில் நனையாதவாறு, நேரக் காப்பக கூரையின் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து குறித்து அறிவிப்பு செய்யும் போது சத்தம் குறைவாக உள்ளதால், மழை மற்றும் வெயிலுக்காக மரத்தடி மற்றும் அருகிலுள்ள கடைகளில் தஞ்சமடையும் பயணியர், பேருந்தை தவற விடுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தின் மையத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே உள்ள மரத்தில், கூடுதலாக ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை