பூமி பூஜையுடன் நின்று போன ரேஷன் கடை கட்டுமான பணி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பழைய காலனி பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.அவர்கள், நீண்ட துாரம் நடந்து சென்று, உத்தமநல்லுார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வந்தனர்.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, இப்பகுதியில் தனியாக நியாய விலைக் கடை அமைக்க, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக மனு அளித்து வந்தனர்.இந்நிலையில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 12.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிதாக நியாய விலைக் கடை அமைக்க, கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமையில் பூமி பூஜை நடந்தது.பூமி பூஜை நடந்து 10 மாதங்கள் கடந்தும், நியாய விலைக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள், இதுவரை துவங்கப்படவில்லை.இது குறித்து, திருமுக்காடு ஊராட்சி தலைவர் பெருமாள் கூறியதாவது:மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை நடந்தது. இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், வட்டார வளர்ச்சி அலுவலர் காலம் தாழ்த்தி வருகிறார்.இது குறித்து பல முறை கேட்டும், உரிய பதில் அளிக்கவில்லை. கட்டடப் பணியை விரைந்து துவங்க, அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்து, பணி அணை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.