சாலை ஓரத்தில் அபாய பள்ளங்கள் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலையில், பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ள இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை, 13 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை பாலுார், ரெட்டிபாளையம், வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரெட்டிபாளையம், பாலுார் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு லோடு ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிக அளவில் இச்சாலையில் சென்று வருகின்றன. செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையான இந்த சாலை ஓரத்தில், கொளத்துார் பகுதியில் அடுத்தடுத்த இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, தனியார்,'இன்டர்நெட் கேபிள்' பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பள்ளங்கள் புதிதாகவும், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலும் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளம் உள்ள பகுதிகளில் ஒளிரும் எச்சரிக்கை பட்டை மற்றும் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.