உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைகள் ஊரப்பாக்கம் பிரியா நகரில் அவதி

 20 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலைகள் ஊரப்பாக்கம் பிரியா நகரில் அவதி

ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம் பிரியா நகரில் உள்ள உட்புற சாலைகள், கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், 11வது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகர், ஜே.சி.நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகர்களில், 50க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் உள்ளன. இவை அனைத்தும், நடக்கவே லாயக்கற்ற நிலையில், மோசமான நிலையில் உள்ளதால், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது: ஊரப்பாக்கம் 11வது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகர், ஜே.சி.நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், புதிதாக வீடு கட்டி குடியேறுவோர் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் தொகை மூன்று மடங்காக உயர்ந்து, உட்புற சாலைகளில் வாகன போக்குவரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள், கடந்த 20 ஆண்டுகளாக புனரமைக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான சாலைகள் பல்லாங்குழிகளாக மாறி உள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால், சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் வந்து செல்வதிலும், குழந்தைகள், பெண்கள் நடந்து செல்லவும் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிதி ஒதுக்கி, பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உட்புற சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்