உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுதாமூரில் புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி பயனின்றி வீண்

சிறுதாமூரில் புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி பயனின்றி வீண்

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர், நடுத்தெரு பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 30 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.தற்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பாழானதால், 15வது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ், 2020 - 2021ல், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டது.இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு, சிறுதாமூர் ஏரியில் உள்ள கிணற்றிலிருந்து, மின் மோட்டார் வாயிலாக, நீரேற்றி சோதனை செய்யப்பட்டது.அப்போது, 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் என்பதாலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கூடுதலான உயரத்தில் அமைக்கப்பட்டதாலும், நீர் ஏற்ற முடியாமல், ஆங்காங்கே குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், குடிநீர் கிணற்றிலிருந்து நீர்த்தேக்க தொட்டிக்கு, குடிநீர் கொண்டு செல்வதற்கு, புதிதாக பிளாஸ்டிக் அல்லது இரும்பு குழாய்கள் அமைக்க வேண்டும் என, மனு அளித்துள்ளனர்.ஆனால், தற்போது வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல், புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வீணாக உள்ளது. எனவே, இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ