திருப்போரூர் -- செங்கை சாலையில் மீடியன் தடுப்பால் அடிக்கடி விபத்து எச்சரிக்கை பதாகை அமைப்பரா?
திருப்போரூர்:திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., தூரம் உடையது. இரு வழிப்பாதையாக இருந்த சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலை பணிகள் முடிவடைந்த இடங்களில், சாலையின் நடுவே மீடியன் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு, செம்பாக்கம் அரசு பள்ளி, மின்வாரிய அலுவலகம் மற்றும் சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட திடீர் மீடியன் தடுப்பில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், எச்சரிக்கை பதாகை எதுவும் அமைக்கப்படவில்லை.இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் மீடியன் இருப்பதை அறியாமல், அதில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.நேற்று மின்வாரியம் அலுவலகம் அருகே உள்ள திடீர் மீடியன் தடுப்பில், லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதில், லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, மீடியன் அமைக்கப்படும் இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் ரிப்ளக்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.