சேவூரில் ஆற்று மணல் திருடிய இருவர் கைது; மூவர் எஸ்கேப்
பவுஞ்சூர்:சேவூரில், இரவு நேரத்தில் ஆற்று மணல் திருடிய இருவரை கைது செய்த போலீசார், தப்பிச் சென்ற மூவரை தேடி வருகின்றனர். பவுஞ்சூர் அருகே பாலாற்றில், இரவு நேரத்தில் ஆற்று மணல் திருடப்படுவதாக, அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, பவுஞ்சூர் அடுத்த சேவூர் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடி வந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோக்களில் மணலை மாற்றுவது தெரிந்தது. இதையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ், 39, மற்றும் ராஜசேகரன், 47, ஆகிய இருவரை மடக்கிப் பிடித்தனர். இதில் சந்துரு, 30, மாரியப்பன், 30, மற்றும் மணி, 32, ஆகிய மூவரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிக்கிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லோடு ஆட்டோக்கள் மற்றும் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் குறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.