செங்கை ரயில் நிலைய பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் திட்டத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு, விரைவு ரயில் சென்று வருகின்றன. செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில் சென்று வருகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் சென்றுவருகின்றனர்.இந்த வளாகத்தில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் தனியாக உள்ளன. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.ரயில் நிலைய நடைமேடை பகுதியில், கூரைகள், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உட்பட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம், ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள, அம்ரித் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா 2023 ம் ஆண்டு, ஜூலையில் துவங்கியது.இப்பணிகளை, ஒப்பந்ததாரர்கள் விரைவாக முடித்துதர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.அதன்பின், ரயில் நிலைய வளாகத்தில், முழுமையாக பணிகள் மேற்கொள்ள பயணியருக்கு மாற்று பாதை அமைக்கப்பட்டது. அதன்பின், ரயில் நிலைய எட்டு நடைமேடைகளில், கூரை, தரையில் சிமெண்ட் கற்கள் பதித்தல், 1 வது நடை மேடை, எட்டாவது நடைமேடை பகுதியில், தலா ஒரு மின் துக்கிகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. நுழைவாயில் பகுதியில், கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி மந்தமாக நடைபெறுவதால், ரயில் நிலையம் செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.ரயில் நிலைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த முடியாமல், பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.