உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவரின் முறைகேடு அம்பலம்! வார்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவரின் முறைகேடு அம்பலம்! வார்டு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவி, தன் கணவருடன் சேர்ந்து, வார்டு கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, தீர்மானம் நிறைவேறியதாக மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தில் நடந்துள்ள முறைகேடுகளால், வளர்ச்சிப் பணிகள் மொத்தமும் முடங்கிவிட்டதாக கூறி, வார்டு கவுன்சிலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. கடந்த 2022ல் நடந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த பவானி, ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில், ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, பவானி மீது வார்டு கவுன்சிலர்கள் 9 பேர் புகார் எழுப்பி, உரிய ஆதாரங்களையும் வழங்கினர்.அதனால், கடந்த 2023 டிசம்பரில், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள், ஊராட்சி ஆவணங்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.அதில், முறைகேடு செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து, ஊராட்சி தலைவர் பவானிக்கு, வங்கியிலிருந்து பணம் எடுக்கும் அதிகாரத்தை, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், பிரிவு 203ன்படி நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.ஆனால், வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று, புதிய வீட்டிற்கு கட்டட வரைபடம் மற்றும் மனைப்பிரிவு உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.இந்த விஷயத்திலும், பவானி தன் கணவர் கார்த்திக்குடன் சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர்.வார்டு கவுன்சிலர்கள் கூறியதாவது:வங்கியிலிருந்து பணம் எடுக்கும் அதிகாரம் பறிக்கப்பட்ட பின்னரும், ஊராட்சி தலைவர் பவானி மற்றும் அவரது கணவர் சேர்ந்து, கட்டட வரைபட அனுமதி, மனைப் பிரிவு அனுமதி அளிப்பதில், தொடர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.முக்கியமாக, வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதல் இன்றி, ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில், புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி மற்றும் வீட்டு மனைப் பிரிவிற்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.கடந்த பிப்., மாதம், போலியான தீர்மானம் நிறைவேற்றி, வார்டு கவுன்சிலர்களின் கையெழுத்து போல் போலியாக கையொப்பமிட்டு, ஊராட்சி கூட்டம் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.இது குறித்து, கடந்த பிப்., 19ல், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தோம்.தொடர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால், ஊராட்சியில் எவ்வித அடிப்படை பணியும் நடக்கவில்லை.பல தெருக்களில் மலைபோல் குப்பை சேர்ந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. பல தெருக்களில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை.எனவே, இதுவரை ஊராட்சியில் நடந்த செலவினங்களுக்கான கணக்கு விபரங்களை, நேர்மையான அதிகாரிகள் தலைமையில் தணிக்கை செய்து, நடந்துள்ள மொத்த ஊழல் விபரங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திரும்பிய மக்கள்

ஊராட்சி கவுன்சிலர்கள், காலை 11:00 மணி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி செயலர், அலுவலக பணியாளர்கள் எவரும், ஊராட்சி அலுவலகத்தில் இல்லை.இதனால், வீட்டு வரி செலுத்த மற்றும் இதர தேவைகளுக்காக, ஊராட்சி அலுவலகம் வந்த, 50க்கும் மேற்பட்டோர் திரும்பி சென்றனர்.

செலவினங்களில் முறைகேடு

முறைகேடுகள் குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:கடந்த 2024 ஏப்., முதல் நடப்பாண்டு ஜன., 31 வரை, 10 மாதங்களில், மாநில நிதி, வீட்டு வரி, கட்டட வரைபட அனுமதி, குடிநீர் வரி என, பல விதங்களில் 3.50 கோடி ரூபாய்க்கும் அதிகம் வருமானம் வந்துள்ளது. ஆனால், இந்த வரவுகளுக்கான செலவினங்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளது.உதாரணமாக, குடிநீர் பராமரிப்பிற்காக மட்டும், 28 லட்சம் ரூபாய், தெரு விளக்கு பராமரிப்பு 11 லட்சம் ரூபாய், வெள்ள நிவாரணம் 7.50 லட்சம் ரூபாய் என, 24 வகை செலவினங்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு, அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.எனவே, தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி தலைவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தவிர, அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை